என் அருமை கலீபா

 

 என் அருமை கலீபா 

உமர் பின் கத்தாப்

(ரலியல்லாஹு அன்ஹு)

Quiz: Do You Know These Facts About Umar ibn Al-Khattab? | Deenspiration

அவுஜுபில்லாஹி மினஷ்ஷைத்தானிர்ரஜீம்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர் ரஹீம்

அன்பிற்கினிய சகோதர சகோதரிகளே என் இளைஞர் சமுதாயமே அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹு (உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நிலவட்டுமாக!)

உமர் இப்னு அல்-கத்தாப் இயற்பெயர் கொண்ட உமர் (ரலி) அவர்களின் சிறப்புகளை ரத்தின சுருக்கமாக கண்மனி நாயகம் (ஸல்அவர்களின் வாயிலாக அறியும் பாக்கியம் பெறுவீர்களாக!

நாங்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்து கொண்டிருந்தபோது அவர்கள், ‘நான் தூங்கிக் கொண்டிருந்தபோது (கனவில்) என்னை சொர்க்கத்தில் கண்டேன். அப்போது (அங்கிருந்த) அரண்மனை ஒன்றின் பக்கத்தில் ஒரு பெண் (உலகில் இறைவணக்கம் புரிபவளாய் இருந்து வந்ததைக் குறிக்கும் வகையில் தன் அழகையும் பொலிவையும் இன்னும் அதிகரித்துக் கொள்ளவும்) உளூச் செய்து கொண்டிருந்தாள். நான், ‘இந்த அரண்மனை யாருடையது?’ என்று (ஜிப்ரீலிடம்) கேட்டேன். உமர் இப்னு கத்தாப் அவர்களுக்குரியது. ஜிப்ரீல் அவர்களும் மற்றும் அங்கிருந்த வானவர்களும்) பதிலளித்தார்கள். அப்போது எனக்கு உமரின் ரோஷம் நினைவுக்கு வந்தது. உடனேஅங்கிருந்து திரும்பிச் சென்று விட்டேன்” என்று கூறினார்கள். இதைக் கேட்ட உமர் (ரலி) அழுதார்கள். பிறகு, ‘இறைத்தூதர் அவர்களே! தங்களிடமா நான் ரோஷம் காட்டுவேன்?’ என்று கேட்டார்கள். அறிவிப்பவர் அபூஹூரைரா (ரலி). நூல்: புஹாரி : 3242 

நான் உறங்கிக் கொண்டிருக்கும்போது கனவில் மக்களில் சிலரைப் பார்த்தேன். அவர்களின் மீது (பல விதமான) சட்டைகள் அணிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் என்னிடம் எடுத்துக் காட்டப்பட்டனர். அச்சட்டைகளில் சில அவர்களின் மார்பு வரை நீண்டிருந்தன. இன்னும் சில அதற்கும் குறைவாக இருந்தன. உமர் இப்னு கத்தாப் (தரையில்) இழுபடும் அளவு (நீண்ட) சட்டை அணிந்தவர்களாக என்னிடம் எடுத்துக் காட்டப்பட்டார்கள்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறியபோது நபித்தோழர்கள், ‘இறைத்தூதர் அவர்களே! (சட்டைக்கு) என்ன விளக்கம் தருகிறீர்கள்எனக் கேட்டதற்கு மார்க்கம் ‘என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் விளக்கம் தந்தார்கள்”. அறிவிப்பவர் அபூ ஸயீதுல் குத்ரீ (ரலி). புஹாரி : 23

நான் உறங்கிக் கொண்டிருந்த வேளையில் (என்னுடைய கனவில்) ஒருபால்கோப்பை என்னிடம் கொண்டு வரப்பட்டது. உடனே (அதிலிருந்த பாலை நான்) தாகம் தீருமளவு குடித்து அது என்னுடைய நகக் கண்கள் வழியாக வெளியேறுவதைப் பார்த்தேன். பின்னர் மீதமிருந்ததை உமர் இப்னு கத்தாப் அவர்களுக்குக் கொடுத்தேன் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறியபோது நபித் தோழர்கள் இறைத்தூதர் அவர்களே! அந்தப்பாலுக்குத் தாங்கள் என்ன விளக்கம் தருகிறீர்கள்?’ என்று கேட்டதற்கு ‘கல்வி என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்”. அறிவிப்பவர்  இப்னு உமர் (ரலி). புஹாரி: 82

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏன் உமர் (ரலி) அவர்களை இவ்வாறு சிறப்பித்துக் கூற வேண்டும் அப்படி அவர் மனிதனாக வாழ்ந்து என்னத்தான் சாதித்துள்ளார் என்று உங்கள் உள்ளம் சிந்திக்கின்றதா அப்படியெனில் வாருங்கள் உங்கள் உமர் பின் கத்தாப் (ரலி) அவர்களின் வரலாற்றிற்குள் பிரவேசிப்போம்.


பெயர்    :    உமர் இப்னு கத்தாப் (என்கிற)  உமர் பின்   கத்தாப் (ரலி)

தாய் பெயர்    :    கந்தமா

தந்தை பெயர்    :    கத்தாப்

மனைவிகள்        :    கரீபா பின்த் அபீ உமைய்யா அல் மக்சூமி ,ஜைனப் பின் மாஸியுன் ,மலைக்கா பின்த் ஜாருல் அல் குஸைய் (என்கிற) உம்மு குல்தூம்

குழந்தைகள்    :    அப்துல்லாஹ் மற்றும் ஹஃப்ஸா


தலைப்புகள்

  • சிறுவயதில் பட்ட இன்னல்கள்
  • முஹம்மது (ஸல்) அவர்களை கொலை செய்ய துணிந்த வாள்! 
  • அமீருல் முஃமினீன் உமர் (ரலியல்லாஹு அன்ஹு) இஸ்லாத்தின் அசைக்க முடியாத தூண்களில் ஒருவர் என்பதற்கு வரலாறு சான்று!
  • உயரிய கலீபா பதவிக்கு ஆசைப்படாதவருக்கு கிடைத்த கண்ணியம்!
  • வரலாற்றில் மிக முக்கிய சம்பவங்கள்

  1. ஏழை பெண்ணுக்காக முதுகில் மூட்டை சுமந்த கலீபா உமர் (ரலி)

  2. ஏழை கர்பிணிக்கு தன் மனைவியைக் கொண்டு பிரசவம் பார்த்த கலீபா உலகில் இப்படி ஒரு சம்பவம் நடந்ததுண்டா? நடக்குமா?

  3. மூதாட்டியின் உத்தரவுக்கு கட்டப்பட்ட கலீபா உமர் (ரலி)

  4. புகழை வேறருத்த கலீபா உமர்பின் கத்தாப்

  5. உமர் பின் கத்தாப் (ரலி) அவர்களின் மரணமும் கட்டளையும்

 

சிறுவயதில் பட்ட இன்னல்கள்


மக்கா மாநகரை விட்டும் 10 மைல் தொலைவிலுள்ள புறவெளிப்பகுதியான தஜ்னான் என்ற பகுதியில் இளமைப் பருவத்தில் ஆடு, ஒட்டகம் மேய்த்து வந்தவர்தான் இந்த உமர் பின் கத்தாப்.

அச்சமயம் வெயிலின் தாக்கம் ஏற்பட்டு களைப்புடன் அமர்ந்தால் சுல்லென்று சாட்டையால் அடி விழும் அடிப்பவர் வேறு யாருில்லை தந்தை கத்தாப் அவர்கள்தான் காரணம் அன்றைய காலகட்டத்தில் ஆடு, ஒட்டகம் மேய்ப்பதால்தான் வருமானம் பெருகும். இவ்வாறு தாம் பட்ட பிற்காலத்தில் உமர் (ரலி) அவர்கள் எப்பொழுதெல்லாம் தஜ்னான் பகுதியை கடந்து செல்வார்களோ அவ்வப்பொழுதெல்லாம் தம் தோழர்களிடம் சொல்லி கண்ணீர் விடுவாராம். (மாஷா அல்லாஹ்)

அஜமிகளாக பல்வேறு சிலைகளை வணங்கிவந்த அன்றைய கால கட்டத்தில் கல்வியும், எழுத்தறிவும் மிகவும் ஒரு அரபிக்கு கிடைப்பது மிக மிக கடினம் ஆனால் உமர்(ரலி) அவர்களோ, எழுதவும் படிக்கவும் கற்றுக் கொண்டார்கள். அன்றைய மக்காவில் எழுதப்படிக்கத் தெரிந்த மக்கள் மொத்தமாக கூட்டி கழித்தாலும் 17 நபர்களே அவர்களில் ஒருவராக இருந்தவர்தான் உங்கள் உமர் பின் கத்தாப் (ரலி). (மாஷா அல்லாஹ்)


முஹம்மது (ஸல்) அவர்களை கொலை செய்ய துணிந்த வாள்! 

 

மக்கத்துக் குறைஷிகளில் மிகவும் பிரபல்யமான கோத்திரமான அதீ என்ற குலத்தை சேர்ந்த கந்தமா மற்றும் கத்தாப் ஆகியோரது மகனாகவும் தாய்மாமன் உறவில் அபூ ஜஹ்ல்-உடனும் இருந்தவர் எந்த அளவுக்கு இஸ்லாத்தின் மீது பகையுணர்வோடு இருந்திருக்க வேண்டும் என்று சிந்தித்துப் பாருங்கள் பயமாக உள்ளதா? அப்படிப்பட்ட காட்டுமிராண்டிகளுடன்தான் வாழ்ந்து வந்தார் உங்கள் இளைஞன் உமர்.

ஒருநாள் இறைத்தூதர் என்று கூறிக்கொண்டு ஏக இறை கொள்கையை எத்திவைக்கும் முஹம்மது என்ற மனிதரை கொல்ல வேண்டும் என்ற துடிப்புடன் தன் கூறிய உடை வாளை உருவியவாரு வாளும் கையுமாக வீட்டை விட்டு வெளியேறியனார் உமர்!

வழியில் நுஐம் (ரலி) என்பவர் இடை மறிக்கவே முஹம்மதைக் கொன்று விட்டு, கஃபாவில் உள்ள நமது கடவுள்களுக்கு ஏற்பட்ட அவமானத்தைத் துடைக்கப் போகின்றேன் என்று கர்ஜித்துக் கொண்டிருந்தார் உமர்.

உடனே நுஐம் (ரலி) அவர்கள் உமரின் மனதை திசை திருப்ப நாடி உன் சகோதரியும், மைத்துனரும் முஸ்லிம்களாகி விட்டார்கள் அவர்கள் இந்நேரம் குர்ஆன் வசனங்களை வாசித்துக் கொண்டு கூட இருக்கலாம், அவர்களைப் போய் கவனியும் என்று நல்லறிவு கூறுகிறார்.

இதை சற்றும் சகித்துக் கொள்ள இயலாத உமர் நெருப்பின் தனலைப் போன்ற ஆத்திரத்துடன் தங்கையின் வீட்டை நோக்கி மின்னலென செல்கிறார் அங்கு எதேச்சையாக குர்ஆனின் வசனங்களை முனுமுனுத்துக் கொண்டிருந்த மைத்துனரின் சடடையைப் பிடித்து உமது முன்னோர்கள் மற்றும் மூதாதையர்கள் மார்க்கத்தை வெறுத்து விட்டீரே! என்று மிரட்டல் விட நாங்கள் சத்தியத்திற்காக அசத்தியத்தைத் தூர எறிந்தோம் என்று அழகிய முறையில் கம்பீர குரலில் பதிலளிக்கிறார் உமரின் மைத்துனர் ஸயீத் (ரலி) அவர்கள்.

இதைக் கேட்டவுடன் உமரின் கண்களில் எரிமலை குழம்பு வெடித்தது போன்று ஆத்திரமடைகின்றது கோபம் தலைக்கேறுகிறது அசம்பாவிதம் ஏதும் நடந்து விடுமோ என்று உண்ணிப்பாக கவனித்த தங்கை ஃபாத்திமா (ரலி) அவர்கள் உமருக்கும் தன் கணவருக்கும் இடையில் திறையாக வந்து நின்றுவிடுகிறார், பின்னர் என் கணவரை விட்டுவிடும் எனது கணவர் மீது கை வைப்பது சரியல்ல என்று எச்சரிக்கிறார்.

மேலும் நாங்கள் முஸ்லிம்களாகி விட்டோம். இதற்காக நீர் என்னையும் என் கணவரையும் கொலை செய்ய வந்திருப்பீரென்றால் தாராளமாக தயவு தாட்சணியமின்றி  எங்களைக் கொன்று விடுங்கள் ஏனெனில் சத்தியத்தை ஏற்றவர்கள் எவருடைய மிரட்டலுக்கு அஞ்சுவதுமில்லை அடிபணிவதுமில்லை என்று பதிலளிக்கிறார். (அல்லாஹு அக்பர்)

எரிமலையாக வெடித்த கோபம் அன்புத் தங்கையின் மென்மையான குரலுக்கு அடிபணிகிறது சற்றே மனம் தடுமாறுகிறது தன்னை சுதாறித்துக் கொள்கிறார் பிறகு அங்கு கண்ணீர் சிந்தும் அன்புத் தங்கையிடம் மனம் விட்டு பேச ஆரம்பித்து முஹம்மது என்ற அந்த மனிதர் கொடுத்த குர்ஆன் வசன ஓலையை என்னிடம் காண்பியுங்கள் என்றார்! (அல்லாஹு அக்பர்)

ஆசைத் தங்கையும் மைத்துணரும் தங்களிடமிருந்த அரிய பொக்கிஷமான அல்குர்ஆனின் அத்தியாயம் தாஹா எழுதப்பட்ட ஓலையை கொடுக்கிறார்கள். முதல் முறையாக அந்த வசனத்தை ஓத ஆரம்பிக்கிறார் கல் நெஞ்சம் கரைகிறது உள்ளம் பிரகாசிக்கிறது உடனே சற்றும் யோசிக்காமல் மின்னலாய் ஸஃபா குன்றினை நோக்கி அதாவது தாருல் அர்க்கம் நோக்கி மாமனிதர் முஹம்மது (ஸல்) அவர்களை சந்திக்க செல்கிறார்.

முஹம்மது (ஸல்) அவர்களை கொலை செய்ய கூறிய உடைவாளுடன் சென்ற உமரின் கைகளை நோக்கி இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது திருக்கரங்களை நீட்டுகிறார்கள் உமரோ சற்றும் சிந்திக்காமல் தனது கரங்களை இறைத்தூதர் (ஸல்) அவர்களின் திருக்கரங்களில் வைத்து, வணக்கத்திற்குரிய இறைவனான அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை”” என்று சத்தியத்திற்குச் சான்று பகர்ந்தார்கள். இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள். (அல்லாஹு அக்பர் அல்லாஹ்வுக்கே என்றும் வெற்றி!)

இஸ்லாத்தை ஏற்ற உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உற்ற உயிர்த் தோழறாக மாறுகிறார் பல்வேறு சந்தர்ப்பங்களில் தம்மை மார்க்கத்திற்காக அர்பணித்து வாழ்கிறார் அவர் எவ்வாறு மார்க்கத்திற்காக உழைத்தார் என்பதை இதோ நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வார்த்தைகளால் விளங்கிக்கொள்வீராக!

நான் உறங்கிக் கொண்டிருக்கும்போது கனவில் மக்களில் சிலரைப் பார்த்தேன். அவர்களின் மீது (பல விதமான) சட்டைகள் அணிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் என்னிடம் எடுத்துக் காட்டப்பட்டனர். அச்சட்டைகளில் சில அவர்களின் மார்பு வரை நீண்டிருந்தன. இன்னும் சில அதற்கும் குறைவாக இருந்தன. உமர் இப்னு கத்தாப் (தரையில்) இழுபடும் அளவு (நீண்ட) சட்டை அணிந்தவர்களாக என்னிடம் எடுத்துக் காட்டப்பட்டார்கள் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறியபோது நபித்தோழர்கள், ‘இறைத்தூதர் அவர்களே! (சட்டைக்கு) என்ன விளக்கம் தருகிறீர்கள்எனக் கேட்டதற்கு மார்க்கம் ‘என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் விளக்கம் தந்தார்கள்”. அறிவிப்பவர் அபூ ஸயீதுல் குத்ரீ (ரலி). நூல் புஹாரி : 23


அமீருல் முஃமினீன் உமர் (ரலியல்லாஹு அன்ஹு) இஸ்லாத்தின் அசைக்க முடியாத தூண்களில் ஒருவர் என்பதற்கு வரலாறு சான்று!

இஸ்லாத்தை அல்லாஹ் தனது இறுதி நபியாம் முஹம்மது (ஸல்) அவர்களின் வாயிலாக முழுமைப் படுத்துகிறான், நபிகளாரும் தம் இறுதி ஹஜ்ஜை நிறைவு செய்துவிட்டு இறுதிப் பேருரையும் நிகழ்த்தி விடுகிறார் காலங்கள் செல்கின்ற இஸ்லாம் அழகாக மலரும் காலத்தில் எதிர்பாராத விதமாக அரபுச் சக்கரவர்த்தியும் இறுதி நபியுமாகிய கண்மணி நாயகம் முஹம்மது (ஸல்) அவர்கள் கி.பி.632ல் இம் மண்ணுலகை விட்டு பிறிகிறார்கள். (இன்னலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவுன்)

இஸ்லாம் தன்னுடைய கண்ணியமிக்க தலைமைத்துவத்தை இழந்து தவிக்கும் சூழல் கண்டு துவண்டுவிடுகிறார்! இஸ்லாம் எனும்  அழகிய கோட்டை தகர்ந்துவிடக்கூடாது, அதிகார போட்டியால் தலைமைத்துவத்திற்கு புரட்சி வெடித்துவிடக்கூடாது என்று கருதிய உமர் பின் கத்தாப் (ரலி) சற்றும் சிந்திக்காமல் சீரிய முடிவு ஒன்றை எடுக்கிறார் விளைவு இஸ்லாத்தின் முதல் கலீபாவாக அபூபக்கர் (ரலியல்லாஹு அன்ஹு) பிரகடனப்படுத்தப்படுதல். (சுபுஹானல்லாஹ்)

தலைமைத்துவத்தை தாங்கிப்பிடிக்க இஸ்லாம் எனும் கோட்டைக்கு தூணாக தம்மை சமர்பித்து சக தோழர்களுடன் தோளோடு தோள் கொடுத்து சங்கை மிகு அபூபக்கர் (ரலி) அவர்களை இஸ்லாத்தின் முதல் கலீபாவாக முன்மொழிந்த பாக்கியத்திற்கு சொந்தக்காரர் உங்கள் உமர் (ரலியல்லாஹு அன்ஹு) ஆவார்கள்.

குழப்பமான காலகட்டத்தில் தெளிவான முடிவை எடுப்பவர்களில் முதன்மையானவர் அமீருல் முஃமினீன் உமர் (ரலியல்லாஹு அன்ஹு) எனும்போது ஈமான் கொண்ட நெஞ்சங்கள் சந்தோஷத்தில் தத்தளிப்பதை நேரில் பார்ப்பது போன்று தோன்றுகிறது நம் உள்ளத்தில்! (அல்ஹம்துலில்லாஹ்)


உயரிய கலீபா பதவிக்கு ஆசைப்படாதவருக்கு கிடைத்த கண்ணியம்!

உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் விருப்பத்தின் அடிப்படையில் பதவியேற்ற இஸ்லாத்தின் கண்ணியமிக்க முதலாம் கலீபா அபூபக்கர்(ரலி) வெற்றிமிக்க தலைவராக விளங்கினார் ஆனால் இரண்டே ஆண்டுகள் ஆட்சிப் புரிந்து நோய்வாய்ப்படுகிறார். எனினும் கண்ணியமிக்க முதல் கலீபா அபூபக்கர்(ரலி) தாம் மரணிக்கும் தருவாயில் தம் சக தோழர்களுடன் ஆலோசணை மேற்கொண்டு குழப்பமான காலகட்டத்தில் தெளிவான முடிவை எடுப்பவர்களில் சிறந்தவரும் அமீருல் முஃமினீனுமாகிய உமர் பின் கத்தாப் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களை கலீபாவாக முன்மொழிந்துவிட்டு மரணிக்கிறார்கள்.

இங்கு ஆச்சரியம் என்னவெனில் முதலாம் கலீபாவை தேர்ந்தெடுத்த பாக்கியம் இரண்டாம் கலீபாவுக்கும் இரண்டாம் கலீபாவை தேர்ந்தெடுத்த பாக்கியம் முதலாம் கலீபாவுக்கும் என்பதே இந்த பாக்கியம் அரபுலகச் சக்கரவர்த்தி முஹம்மது (ஸல்) அவர்களை பின்பற்றியதால் கிடைத்தாகவே காணப்படுகிறது. அதன்படி அமீருல் முஃமினீன் உமர் பின் கத்தாப் (ரலியல்லாஹு அன்ஹு)              ஹிஜ்ரி 13-ம் ஆண்டு ஜமாதுல்ஆகிர் 23-ந்தேதி (கி.பி 23-08-633-ம் தேதி) பதவியேற்றார்.


உமர் (ரலி) ஆட்சிக் காலம் பொற்காலம்

  • கூபா, புஸரா உள்ளிட்ட நகரங்களை நிர்மாணித்தார்.
  • அனைத்து நகரங்களிலும் நீதிபதி (காஜி‌‌‌‌‌‌‌)களை இவரே முதன்முதலில் நியமித்தார்.
  • கடிதங்களை எடுத்துச்செல்ல உதவியாக அஞ்சலகங்களை ஏற்படுத்தினார்.
  • ஹிஜ்ரி 18-ல் பாரசீகர்களின் நாணய வடிவில் நாணயங்களை வெளியிட்டார்.
  • இவரின் ஆட்சியில் வேத வசனங்கள் மறைச் சட்டங்கள் முழு மலர்ச்சி பெற்றன.
  • சாதி, மத, பேதமின்றி அனைத்து மக்களும் இறைநீதியின் நிழலில் நிம்மதியான வாழ்வை அனுபவித்தனர்.
  • இறைச்சட்டங்களை நடைமுறைப்படுத்தும்போது ஆட்சியாளர்கள் ஏதேனும் தவறு செய்தால், துணிச்சலுடன் தட்டிக் கேட்கும் உரிமையும் மக்களுக்கு வழங்கப்பட்டிருந்தது.
  • தமது அரபியப் படைகள் வெற்றிகொண்ட இந்தப் பரந்த பேரரசை முறையாக ஆட்சி செய்யத் தக்க சட்ட திட்டங்களை வகுத்தார்.
  • அரபுகள் சலுகைகள் பெற்ற இராணுவப் பிரிவினராகத் தாங்கள் வெற்றி கொண்ட வட்டாரங்களில் வாழ வேண்டும் என்றும் அந்தந்த நாட்டு மக்களிடமிருந்து விலகிக் கோட்டைகளுடைய நகரங்களுக்குள் இருக்க வேண்டுமென்றும் முடிவெடுத்தார்.
  • பெருவாரியாக அரபுகளாக இருந்த முஸ்லீம் ஆட்சியாளர் களுக்குக் குடிமக்கள் திறை செலுத்தி வர வேண்டும். மற்றபடி அவர்களுடைய வாழ்க்கையில் எவ்வித தலையீடுமின்றி, அவர்களை அமைதியாக இருக்க விட்டுவிட வேண்டும் என்று முழக்கமிட்டார்.
  • குறிப்பாக மாற்றுமதத்தவர்களை கட்டாயப்படுத்தி இஸ்லாத்தில் சேறுமாறு செய்யக்கூடாது என்றும் சூழுரைத்தார் இதன் காரணமாகவே முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னர் இஸ்லாம் பரவியதற்கு உமர் (ரலி) ஒரு முக்கியக் காரணமானவராக விளங்கினார்.

வரலாற்றில் மிக முக்கிய சம்பவங்கள்

ஏழை பெண்ணுக்காக முதுகில் மூட்டை சுமந்த கலீபா உமர் (ரலி)

கலிஃபா உமர் (ரலி) அவர்கள் ஆட்சிப் பொறுப்பில் இருந்த போது குடிமக்கள் நிலையை அறிவதற்காக நகர்வலம் செல்லும் வழக்கம் உடையவர்கள். அப்போதும மதினா நகரெங்கும் பஞ்சம் நிலவி வந்தது.

நிவாரண உதவிகள் பாதிக்கப்பட்ட அனனவருக்கும் கிடைத்திட வேண்டும் என்பதில் உமர் (ரலி) அவர்கள் மிகுந்த கவனம் செலுத்தினார்கள்.

ஒருநாள் இரவு நேரத்தில் கலிஃபா அவர்கள் தமது உதவியாளருடன் மதினாவின் புறநகர்ப் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, ஒரு குடிசையிலிருந்து விளக்கு வெளிச்சமும் குழந்தைகளின் அழுகுரலும் வரக் கண்டார்கள்.

கலிஃபா அவர்கள் அந்தக் குடிசையை நெருங்கிய போது, அங்கே ஒரு பெண்மணி அடுப்பில் ஒரு சட்டியில் ஏதோ சமைத்துக் கொண்டிருப்பதையும் அவருக்கருகில் அழுது கொண்டிருந்த குழந்தைகளையும் கண்டார்கள்.

கலிஃபா உமர் (ரலி) அவர்கள், அப்பெண்மணிக்கு சலாம் சொல்லி அவரது அனுமதி பெற்று அவருக்கருகில் சென்றார்கள். அந்தப் பெண்மணி உமர் (ரலி) அவர்களை பார்த்ததில்லை என்பதால் வந்திருப்பவர் கலிஃபா என்பதை அறியவில்லை.

இதோ அந்த உறையாடல்

உமர் (ரலி)     

“குழந்தைகள் ஏன் அழுது கொண்டிருக்கின்றன?” 

பெண்மணி     

அவர்கள் பசியோடிருக்கின்றார்கள். அதனால்தான் அழுகிறார்கள்” 

உமர் (ரலி)     

“அடுப்பில் என்ன இருக்கிறது?” 

பெண்மணி   “அது வெறும் சுடுநீரும் சில கற்களும்தான். அவர்களின் பசியைப் போக்க நான் ஏதோ சமைத்துக் கொண்டிருக் கிறேன் என்ற எதிர்பார்ப்பிலேயே அவர்கள் தூங்கி விடுவார்கள். அதற்காகத்தான் இப்படிச் செய்து கொண்டிருக்கிறேன். இந்தத் துன்பமான நேரத்தில் எங்களுக்கு ஒரு உதவியையும் செய்யாத கலிஃபா உமர் அவர்களுக்கும் எனக்குமிடையில் இறுதித் தீர்ப்பு நாளன்று அல்லாஹ்தான் ஒரு நல்ல தீர்ப்பை வழங்குவான்”.


அப்பெண்மணியின் இந்த வார்த்தைகளைக் கேட்டு பதறிப்போன கலிஃபா உமர் (ரலி) அவர்களின் கண்களில் நீர் வழிந்தோட, “அல்லாஹ் உம் மீது கிருபை செய்வானாக! உமது துன்பமான நிலைமையை உமர் எப்படி அறிவார்?” என்று வினவினார்.

“முஸ்லிம்களின் தலைவராக இருக்கும் உமர் எங்கள் நிலைமையை அறிந்திருக்க வேண்டாமா? என்றார் அந்தப் பெண்மணி.

கலிஃபா உமர் (ரலி) அவர்கள் விரைந்து நகருக்குத் திரும்பி உடனே பைத்துல் மாலுக்குச் சென்றார்கள். ஒரு சாக்குப்பையில் மாவு, நெய், பேரீத்தம் பழங்கள் போன்ற உணவுப் பொருட்களும் துணிமணிகளும் எடுத்து வைத்தார்கள். கொஞ்சம் பணமும் எடுத்துக் கொண்டார்கள். சாக்குப்பை நிரம்பியதும் தமது உதவியாளரை அழைத்து, அதைத்தூக்கி தமது முதுகில் வைக்கும்படி சொன்னார்கள்.

அவர்களின் உதவியாளர் பதறியவாறு, இந்த மூட்டையை நானே தூக்கி வருகிறேனே அமீருல் முஃமினீன் அவர்களே!” என்றார். உமர் (ரலி) அவர்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை.

“என்ன? நியாயத் தீர்ப்பு நாளன்று எனது சுமையை உம்மால் சுமக்க முடியுமா? மறுமையில் அந்தப் பெண்மணி பற்றி கேள்வி கேட்கப்படப் போவது நான்தானே? அதனால் இந்தச் சுமையையும் நானே சுமக்க வேண்டும் என்றார்!

உதவியாளர் மிகவும் தயங்கியபடி அந்த மூட்டையைத் தூக்கி கலிஃபா அவர்களின் முதுகின் மேல் வைத்தார். அதனைத் தூக்கிக் கொண்டு ஓட்டமும் நடையுமாக அப்பெண்மணியின் குடிசையை நோக்கி விரைந்தார்கள் உமர் (ரலி) அவர்கள். அவர்களை பின்தொடர்ந்து சென்றார் உதவியாளர்.

குடிசையை அடைந்த உமர் (ரலி) அவர்கள் மூட்டையிலிருந்து மாவு, நெய், பேரீத்தம் பழங்களை எடுத்து அவற்றை பிசைந்து, அடுப்பிலிருந்த சட்டியிலிட்டு கிளறினார்கள். அருகிலிருந்த ஊதுகுழலை எடுத்து ஊதி அடுப்புத் தீயை தூண்டி எரியச் செய்தார்கள். அவர்களின் அடர்ந்த தாடிக்குள் புகை படிந்தது.

சிறிது நேரத்திற்குப் பிறகு உணவு தயாரானதும் கலிஃபா அவர்களே அந்த உணவை அப்பெண்மணிக்கும் அவரது குழந்தைகளுக்கும் பரிமாறினார்கள். மீதம் இருந்த உணவுப் பொருட்களை அவர்களின் அடுத்த வேளை உணவிற்காக வைத்துக் கொள்ளும்படி கொடுத்தார்கள். வயிறு நிரம்ப உண்ட குழந்தைகள் மகிழ்ச்சியாக சிரித்து விளையாடத் தொடங்கினார்கள். அதைப் பார்த்த உமர் (ரலி) அவர்களின் முகமும் மலர்ந்தது.

உமர் (ரலி) அவர்கள் அப்பெண்மணியிடம் ‘அக்குடும்பத்தை பராமரிப்பவர் யாரும் இல்லையா’ என வினவினார்கள். அந்தக் குழந்தைகளின் தந்தை இறந்து விட்டதாகவும் அவர்களுக்கு ஆதரவளிக்க வேறு யாரும் இல்லை எனவும் அப்பெண்மணி தெரிவித்தார்.

வீட்டிலிருந்த உணவுப் பொருட்களெல்லாம் தீர்ந்துப் போய் மூன்று நாட்களாக பட்டினியாக இருந்த நிலையில் அறிமுகமில்லாத அந்த மனிதர் செய்த உதவிக்கு நன்றி தெரிவித்த அந்தப் பெண்மணி சொன்னார், “உங்களின் இந்த கருணைச் செயலுக்கு அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக! உண்மையில் கலிஃபா பதவிக்கு உமரை விட நீங்களே மிகப் பொருத்தமானவர்”. அவருக்கு எதிரில் அமர்ந்திருப்பது கலிஃபா உமர் (ரலி) அவர்கள்தாம் என்பதை அப் பெண்மணி இன்னும் அறிந்து கொள்ளவில்லை!

உமர் (ரலி) அவர்களும் ‘தாம் இன்னார்’ என்பதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், “நீர் கலிஃபாவை சந்திக்கும்போது அங்கே என்னை கண்டு கொள்வீர்” என்றார்கள்.

கொஞ்ச நேரம் அங்கேயே அமர்ந்திருந்து குழந்தைகள் விளையாடுவதை பார்த்துக் கொண்டிருந்த உமர் (ரலி) அவர்கள் அதன் பின்னர் மதினா திரும்பினார்கள். செல்லும் வழியில் தன் உதவியாளரிடம் சொன்னார்கள், நான் ஏன் அங்கே அமர்ந்திருந்தேன் தெரியுமா? அக்குழந்தைகள் பசியால் அழுது கொண்டிருந்ததை பார்த்த நான் அவர்கள் மகிழ்ச்சியாக சிரித்து விளையாடுவதையும் சிறிது நேரம் பார்க்க வேண்டும் என்று விரும்பினேன். அதனால்தான்.

வீரத்திற்குப் பெயர் பெற்ற உமர் (ரலி) அவர்கள், கருணையுள்ளம் உடையவராகவும் குடிமக்கள் மேல் அக்கறை கொண்ட பொறுப்பான தலைவராகவும் விளங்கினார்கள்!


ஏழை கர்பிணிக்கு தன் மனைவியைக் கொண்டு பிரசவம் பார்த்த கலீபா உலகில் இப்படி ஒரு சம்பவம் நடந்ததுண்டா? நடக்குமா?


மதினா நகரமே உறக்கத்தில் ஆழ்ந்து கொண்டிருந்த நள்ளிரவு நேரம். எங்குமே பேரமைதி. வானிலே ஆங்காங்கே கண் சிமிட்டும் நட்சத்திரங்கள். இவ்வேளையில் ஜனாதிபதி உமர் (ரலி) அவர்கள் வீதியிலே இறங்கி நகர்வலம் வந்தார்.

நகரின் எல்லையைக் கடந்து செல்கையில், தன்னந்தனியே இருந்த சின்னஞ்சிறு கூடாரம் ஒன்றில் சிறு விளக்கொளியைக் கண்டு அதனை நோக்கி நடந்தார். அருகில் சென்று பார்த்த போது, அங்கே ஒரு மனிதர்தலை குனிந்து அமர்ந்திருந்தார்.

அவரை நோக்கி உமர் (ரலி) இரண்டு முறை ஸலாம் கூறியும் அவர் பதில் ஏதும் கூறாததால், மூன்றாவது முறையும் ஸலாம் சொன்னார். அம்மனிதர் ஆவேசப்பட்டு, பக்கத்தில் கிடந்த வாளை எடுத்துக் கொண்டு,

நீ போக மாட்டாயா….?

உன்னைப் பார்த்தால் பிச்சைக்காரனாகக் கூடத் தெரிய வில்லையே…?

வழிப்பறி கொள்ளையனாகவல்லவா தோன்று கிறது…?’ எனக் கத்தினார்.

உமரோ அமைதியாக,

“நண்பரே..! நீர் நினைப்பது போல் நான் பிச்சைக்காரனுமல்ல, வழிப்பறி கொள்ளையனுமல்ல. உம்மைப் பார்த்தால் வெளியூர்க்காரர் போல் தோன்றுகிறது. அதனால் தான் உம்மோடு பேச நினைத்தேன்’ என்று சொல்லிக் கொண்டிருக்கையில் கூடாரத்திலிருந்து பெண்ணின் கூக்குரல் கேட்டது. திடுக்கிட்ட உமர் (ரலி) அவர்கள், “அங்கே கூக்குரலிடுவது, யார்..?’

என வினவ, “அவள் என் மனைவி’ என அம்மனிதர் கூற,

“அவர் ஏன் கூச்சலிட வேண்டும்..?” என்று உமர் கேட்டார்.

“பிழைப்பைத் தேடி, இந்நாட்டிற்கு வந்தோம். வந்த இடத்தில் பிரசவ வேதனை தொடங்கி விட்டது. என்ன செய்வதெனத் தெரியாமல் நான் இங்கு கவலையோடு உட்கார்ந்திருக்கிறேன்’ என்று பதிலளித்தார் அந்த மனிதர்.

“மருத்துவச்சியை அழைத்து வருகிறேன்’ என உமர் (ரலி) எழுந்ததும், “வேண்டாம், வேண்டாம்’ எனப் பதறினார் அம்மனிதர்.

“ஏன் மருத்துவச்சியை வேண்டாம் என்கிறீர்..?’ என உமர் வினவியதும்,

“மருத்துவச்சிக்குக் கொடுக்க என்னிடம் பணமில்லை’ என்றார் சோகமுடன்.

“நான் அழைத்து வரும் மருத்துவச்சி, பணம் வாங்க மாட்டாள். கவலைப்படாதீர்கள்’ என்று சொல்லிக் கொண்டே வேகமாக வெளி நடந்தார் உமர்.

வீட்டை அடைந்ததும் தன்னுடைய மனைவியை அழைத்து உடனே புறப்படுமாறு உத்தரவிட்டார். “நீங்கள் சாப்பிடவில்லையா..?’ என மனைவி கேட்க, “இல்லை. அந்தச் சாப்பாடு வேறொருவருக்குத் தேவை’ என்றார்.

“கொஞ்சம் பாலாவது அருந்துங்களேன்’ என்றதும், “வேண்டாம். பிரசவ வேதனையிலிருக்கும் அந்தப் பெண்மணிக்கு அது தேவைப்படலாம். உடனே அவற்றை எடுத்துக் கொண்டு புறப்படு.

நான் ஒட்டகத்தை ஓட்டி வருகிறேன்’ என்று புறப்பட்டார் உமர்.

சிறிது நேரத்தில் உமரும், அவருடைய மனைவியும் கூடாரத்தை அணுகியதும், மனைவியை கூடாரத்திற்குள் அனுப்பி விட்டு உமர் அவர்களும், அம்மனிதரும் வெளியில் இருந்து உரையாடிக் கொண்டிருந்தனர்.

மனிதருடன் உமர் (ரலி) உறையாடல்

மனிதர்        

“இந்நாட்டிற்கு உமர் தானே இப்போது தலைவர்…?’

உமர் (ரலி)     

“ஆமாம்.’

மனிதர்      

 “அவர் மிகவும் கடினமானவர் என்கிறார்களே..!’

உமர் (ரலி)  

“அது அவரவர் கருத்தைப் பொறுத்தது.’

மனிதர்      

“நீர் உமரை பார்த்திருக்கிறீரா….?’

உமர் (ரலி) 

“பார்த்திருக்கிறேன்.’

மனிதர்  

“அவரிடம் நிறையப் பணம் இருக்குமே?’

உமர் (ரலி)  

“அவரிடம் ஏது பணம்…?’ 

மனிதர

“என்ன வேடிக்கை, ஒரு அரசாங்கத் தலைவர் பணம் சேர்த்து வைக்காமலா இருப்பார்…?’

உமர் (ரலி)

“அப்படி பணம் சேர்க்கும் யாரையும் நாங்கள் தலைவராகத் தேர்ந்தெடுப்பதில்லை.’

இச்சமயத்தில் கூடாரத்திலிருந்து மருத்துவச்சியின் குரல் ஒலித்தது. “ஜனாதிபதி அவர்களே……………..!  உங்கள் நண்பருக்கு வாழ்த்துக் கூறுங்கள்.  அவருக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது.’

“ஜனாதிபதி’ என்ற சொல்லைக் கேட்டவுடன் அந்த மனிதர் உடல் நடுங்கி, உமரின் காலில் விழச் சென்றார். அம்மனிதரை அணைத்துக் கொண்டு“நண்பரே…! ஏன் இப்படிப் பயப்படுகிறீர்கள்…? என்ன நடந்துவிட்டது..?’ என அன்போடு கேட்டார் ஜனாதிபதி உமர் அவர்கள்.

“அப்படியானால் மருத்துவம் பார்த்த அந்தப் பெண்மணி யார்..?’

என அம்மனிதர் வினவ, “அவர் எனது மனைவி’ என உமர் கூறவும், ஆச்சரியத்தால் திகைத்துப் போன அந்த மனிதர், நன்றி கலந்த குரலில் கேட்டார், “இந்த நாட்டின் தலைவரான தாங்களா இவ்வளவு ஊழியம் எனக்குச் செய்தீர்கள்…?’

“இதில் வியப்படைய என்ன இருக்கிறது நண்பரே…?

ஒரு நாட்டின் தலைவன் என்பவன், அந்நாட்டு மக்களின் ஊழியன்தானே…!

நாளை பள்ளிவாசலுக்கு வாருங்கள். உங்கள் வேலை வாய்ப்புக்கு ஏற்பாடு செய்வோம்’ எனக்கூறி புறப்பட்டார் உத்தமர் உமர் (ரலி) அவர்கள்.



மூதாட்டியின் உத்தரவுக்கு கட்டப்பட்ட கலீபா உமர் (ரலி)



திருமணம் புரிய விரும்பும் ஆண்கள் மணமகளுக்கு தரும் மஹர் தொகை அதிகரித்துக் கொண்டிருந்தது. அதனால் ஆண்களின் திருமணம் தடைபட்டது.

உமர்(ரலி) அவர்கள் இப்பிரச்னையை ஈரடுக்கு குழுவில் விவாதித்து முடிவெடுத்து பொதுமக்களைப் பள்ளி வாசலில் கூட்டினார்கள்.

மேடையேறிய கலீபா, நபிகள் நாயகம் வழங்கிய மஹரை விட அதிக மஹரை யாரும் வழங்கக் கூடாது. இந்த ஆணையை மீறி வழங்கப்படும் மஹர் பறிமுதல் செய்யப்பட்டு பைத்துல்மால் பொதுநிதியில் சேர்க்கப்படும் என்று அறிவித்தார்கள்.

உடனே ஒரு மூதாட்டி, உமரே! நீர் மேடையிலிருந்து இறங்கிவிடும்” என்று கூறினார். கீழே இறங்கிய உமர் (ரலி) அவர்கள் அம்மூதாட்டி அருகே சென்று காரணம் கேட்டார்கள்.

அம்மூதாட்டி

“”மனைவிக்கு நீங்கள் ஒரு பொற்குவியலைக் கொடுத்திருந்தாலும் அதிலிருந்து நீங்கள் எதனையும் எடுத்துக் கொள்ளாதீர்கள்” என்ற திருக்குர்ஆனின் 4-20வது வசனத்தை நினைவூட்டினார்கள்.

கலீபா அவர்களுக்கு நல்வழி காட்டியதாக அம்மூதாட்டியைப் பாராட்டினார். மூதாட்டி நினைவுபடுத்தியபடி அதிக மஹர் பெற மகளிருக்கு உரிமை உண்டு என்றும் பிரகடனப்படுத்தினார். மக்களாட்சியின் மாண்பை உயர்த்தினார்.


புகழை வேறருத்த கலீபா உமர்பின் கத்தாப்


உலக வரலாற்றைத் தலைகீழாகப் புரட்டிய ஒரு சில போர்ப்படை தலைவர்களின் பெயர்களில் இதுவும் ஒன்று. இறைவனின் வாள் (சைபுல்லாஹ்) என்ற பெயர் பெற்ற காலித் பின் வலீத்(ரழி) அவர்களின் வீர வாளையும், சாகசங்களையும் எதிர்க்க முடியாமல் சக்திமிக்க ரோம சாம்ராஜ்ஜியமும், பாரசிக ஏகாதிபத்தியமும் தலைகுப்புற வழிந்தன. கி.பி 7 நுற்றாண்டில் அவரது பெயரைக் கேட்டு நடுங்காத உலக அரசுகள் இல்லை என்ற சொல்லலாம்.

காலித் பின் வலீத்(ரழி) அவர்கள் தலைமை ஏற்று சென்ற எல்லா போர்களிலும் வெற்றி வாகை சூடினார். அப்படிப்பட்ட மாவிரர் காலித் பின் வலீத்(ரழி) அவர்களை, ஒரு போர்களத்தில் ஒரே ஒரு உத்தரவு முலம் தளபதி பதவியிலிருந்து உமர்((ரழி) அவர்கள் நிக்கிவிட்டார்கள்.

சிரியா நாட்டிலே ரோமானிய பெரும் படைகளை எதிரித்துப் போராடிக் கொண்டிருந்த இஸ்லாமியப் படைகளின் தளபதியாகிய காலித் பின் வலீத்(ரழி) அவர்களுக்கு போர்க்கள முகாமில் உமர்((ரழி) அவர்களின் கடிதம் கிடைத்தது. அந்த கடிதத்தில்,

தளபதி காலித் அவர்களுக்கு உமர் பின் கத்தாப் எழுதிக் கொள்வது. இந்த உத்தரவு முலம் காலித் அவர்கள் தளபதி பதவியிலிருந்து விலக்கப்பட்டு அவருக்கு பதிலாக அபூ உதைபா அவர்கள் நியமிக்கபடுகிறார். உடனடியாக காலித் அவர்கள் பொறுப்புகள் அனைத்தையும்அபூ உதைபா அவர்களிடம் ஒப்படைத்துவிட்டு மதினாவுக்குத் திருப்ப வேண்டும்.”

படைவீரர்களிடம் இந்த கடிதம் பகிரங்கமாகப் படிக்கப்பட்ட அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். இஸ்லாத்திரிக்க வாழ்நாளையே அரிப்பணித்தவர். நபி(ஸல்) அவர்கள் காலத்தில் இருந்து தளபதிப்  பதவி விகித்து வருபர். போர்க்களத்திலே இணையற்ற  செல்வாக்கும், நன்மதிப்பும் பெற்றிருப்பார் காலித் பின் வலீத்(ரழி) அவர்கள்.

அப்படிப்பட்ட மாவிரர் காரணமின்றி விலக்கப்படுவதை ஏற்றுக் கொள்வாறா? கலிபாவின் உத்தரவை அவர் ஏற்க மறுத்து புரட்சிக் கோடி உயர்த்தினால் என்னவாகும்? இஸ்லாமிய குடியரசே கலகலத்துவிடுமே!! முஸ்லிம் படை விரர்களிடம் கவலை பற்றிக்கொண்டது.

ஆனால் இதில் எதுவுமே நடக்கவில்லை. ஒரு வார்த்தைக் கூட பேசவில்லை காலித் பின் வலீத்(ரழி) அவர்கள். உடனடியாக பொறுப்புகள் அனைத்தையும் அபூ உதைபா அவர்களிடம் ஒப்படைத்துவிட்டு மதினாவுக்கு புறப்பட்டார்.

மதீனா வந்தடைத்த தளபதி காலித் பின் வலீத்(ரழி) அவர்கள், அவரது நீண்டநாள் நண்பரும், கலிபாவான  உமர்((ரழி) அவார்களை காணச் சென்றரர். இரு நண்பர்களும் கட்டித் தழுவி கொண்டுகுடும்ப நலன்களைப் பரிமாறிக் கொண்டனர். கடைசியாக காலித் பின் வலீத்(ரழி) அவர்கள்நண்பரே !! தளபதி பதவியிலிருந்து நான் ஏன் விலக்கப்பட்டேன் என்பதை அறியலாமா? என்று கேட்டார்.

அதற்கு உமர்(ரழி) அவர்கள்,

உங்களது வீரமும்வெற்றியும் பொதுமக்களின் கண்ணை மறைப்பதைக் கண்டேன். இறைவனது புகழ்பாட வேண்டிய மக்களின் நாவுகள் உங்கள் புகல்பாடுவதைக் கேட்டேன்என்னைப் போன்ற சாதாரண மனிதனால் பதவி நீக்கிவிடக் கூடிய சாதாரண மனிதர்தான் காலித் என்பதை பொதுமக்களுக்கு உடனடியாக உணர்த்தாவிடடால் நிலைமை மிஞ்சி விடுமென அஞ்சினேன். ஆகவே விளக்கினேன். இதன் முலம் பொதுமக்களையும்உங்களையும்என்னையும் கூடத்தான் புகழ் என்ற போதையிலிருந்து காப்பாற்றிவிட்டதாக நம்புகிறேன்.

நீங்களும் நானும் இறந்துவிடக் கூடிய சாதாரண மனிதர்கள். இஸ்லாத்தின் பெருமையோ என்றும் நிலைத்து நிற்க வேண்டியது என்பது நமது இலட்சியம். அந்தப் பெருமை காலித் இல்லாவிட்டாலும்உமர் இல்லாவிட்டாலும் நின்று நிலைக்கும் என்பதை நாம் நிருப்பித்தாக வேண்டும்.
உங்களை விலக்கியது முலம் அதை ஓரளவு நிருபித்துவிட்டதாக நம்புகிறேன் என்று கூறினார்கள்.

உமர்(ரழி) அவர்களின் பதிலை கேட்டு மாவிரர் காலித் பின் வலீத்(ரழி) அவர்களின் முகத்தில் மகிழ்ச்சி தவழ்ந்தது.


உமர் பின் கத்தாப் (ரலி) அவர்களின் மரணமும் கட்டளையும்


கிபி 644-ம் ஆண்டு பஜ்ரு நேரத் தொழுகையை நடத்திகொண்டிருந்த போது முஸ்லிம் போல் வேடம் தரித்த பைரோஸ் என்ற பாரசீக அடிமையால் குருவாளால் ஆறு முறை குத்தப்பட்டார் உமர் (ரலி). மூன்று நாட்களுக்கு பின் மரணமானார். (இன்னலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவுன்)

இறக்கும் முன் இவர் ஆறு நபர்கள் கொண்ட ஒரு குழுவை அமைத்து, அதனிடம் தங்களுக்குள் தனக்குப் பிந்திய கலீபாவாக ஒருவரைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளப் பணித்தார். மேலும் 3 நாட்கள் இதற்கு அவகாசமும் கொடுத்தார். இவ்வாறு உஸ்மான் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அடுத்த கலீபாவாக அந்தக் குழுவினரால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.


உமர் பின் கத்தாப் (ரலி) அவர்களுக்கு கிடைத்த பாக்கியம்!

எங்கள் இரண்டாம் கலீபாவும் சத்திய சஹாபிய நபித் தோழருமான உமர் பின் கத்தாப் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் நபிவழியை அச்சுபிசகாமல் வாழ்ந்துக்காட்டியதற்காக அல்லாஹ் அவருக்கு வழங்கிய பாக்கியம் என்ன தெரியுமா? இறந்த பின்னர் இவரின் உடல் மதீனாவில் அரேபிய சக்கரவர்த்தி முஹம்மது நபி (ஸல்) அவர்களின் கல்லறைக்கும் அரபுலக முதல் கலீபா அபூபக்கர் (ரலி)யின் கல்லறைக்கும் அருகே நல்லடக்கம் செய்யப்பட்டதுதான் இந்த பாக்கியத்தை நம்மில் எவராது பெற இயலுமா? ஆதாரம்

உமர் (ரலி) (இறந்தவுடன்) கட்டிலில் கிடத்தப்பட்டிருந்தார்கள். அப்போது மக்கள், அவரைச் சுற்றிலும் (எல்லாப் பக்கங்களிலும்) சூழ்ந்து பிரார்த்திக்கலாயினர். அவரின் ஜனாஸா (சடலம்) எடுக்கப்படுவதற்கு முன்பாக அவருக்காக ஜனாஸாத் தொழுகை தொழலாயினர். அப்போது நான் அவர்களிடையே இருந்தேன். என் தோளைப் பிடித்துக் கொண்டிருந்த ஒருவர் தான் என்னை திடுக்கிடச் செய்தார். (யாரென்று திரும்பிப் பார்த்த போது) அது அலீ இப்னு அபீதாலிப் (ரலி) தாம். அவர்கள், ‘உமர் அவர்களுக்கு அல்லாஹ் கருணை புரிவானாக!” என்று பிரார்த்தித்துவிட்டு, 

‘(உமரே!) உயரிய நற்செயலுடன் நான் அல்லாஹ்வைச் சந்திப்பதற்கு முன்மாதிரியாக, நான் விரும்பி ஏற்கத் தக்கவர் எவரும் உங்களுக்குப் பின்னால் இல்லை.

(நீங்கள் தாம் அத்தகைய மனிதர்) அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் உங்களை உங்கள் தோழர்க(ளான நபி ( ஸல்) அவர்கள் மற்றும் அபூபக்ர்  (ரலி) அவர்)கள் இருவருடனும் தான் (அவர்களின் மண்ணறைக்கு அருகில் தான்) அடங்கச் செய்வான் என்று எண்ணியிருந்தேன்.

ஏனெனில், நபி (ஸல்) அவர்கள், ‘நானும் அபூபக்ரும் உமரும் (இங்கே) சென்றோம்” என்றும் ‘நானும் அபூபக்ரும் உமரும் (இந்த இடத்திற்கு) உள்ளே புகுந்தோம்” என்றும் ‘நானும் அபூபக்ரும் உமரும் புறப்பட்டோம்” என்று சொல்வதை நான் நிறையச் செவியுற்றிருக்கிறேன் எனக் கூறினார்கள். அறிவிப்பவர் இப்னு அப்பாஸ் (ரலி) நூல் புஹாரி : 3685

முடிவுரை

அன்பிற்கினிய சகோதர சகோதரிகளே பெருமை என்பது அல்லாஹ்வுக்கு மட்டுமே உரியது அதை யாருக்கும் எதற்கும் கொடுக்கக்கூடாது என்று வாதாடி வாழ்ந்துகாட்டிய உத்தம நபித்தோழர் உமர் பின் காத்தாப் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் உத்தரவு மற்றும் வழிகாட்டுதளுக்கிணங்க இந்த கட்டுரையின் தலைப்பை மிகச் சாதாரணமாக என் அருமை கலீபா உமர் பின் கத்தாப் (ரலியல்லாஹு அன்ஹு) என்று வைத்துள்ளோம்! இதில் தவறு ஒன்றுமில்லையே உங்கள் மனசாட்சியை தட்டிப் பாருங்கள்!

சாதாரண கவுண்சிலர் பதவி கிடைத்துவிட்டாலே ஜாம்பவான், மாண்புமிகு, இதயதெய்வம், வைக்கம் வீரன், மஹாத்மா, புரட்சித் தலைவன், காங்கேயக் காளை, தென்னாட்டு சிங்கம், லொட்டு லொசக்கு என்று பெயர்களை வைத்துக்கொண்டு இன்று நாம் போஸ்டர் ஒட்டி மகிழ்கிறோம் ஆனால் உயிருடன் இருந்தாலும் இறந்தாலும் காலித் இல்லாவிட்டாலும்உமர் இல்லாவிட்டாலும் நின்று நிலைக்கும் என்பதை நாம் நிருப்பித்தாக வேண்டும் என்று கர்ஜித்த எங்கள் உத்தம நபித்தோழருக்கு நாம் எவ்வாறு புகழ்மாலை சூட்ட இயலும் அவ்வாறு சூட்டினால் நாம் அவரை இகழ்ந்த நபர்களில் ஒருவராக ஆகிவிடுவோமே! எனவே என் அமீருள் மூமினீனை நாம் கண்ணியப்படுத்தும் விதமாக என் அருமை கலீபா உமர் பின் கத்தாப் (ரலியல்லாஹு அன்ஹு) என்று கூறியுள்ளோம். இதோ அவரின் அமுத மொழிகள்

 

உங்களது வீரமும்வெற்றியும் பொதுமக்களின் கண்ணை மறைப்பதைக் கண்டேன். இறைவனது புகழ்பாட வேண்டிய மக்களின் நாவுகள் உங்கள் புகல்பாடுவதைக் கேட்டேன். என்னைப் போன்ற சாதாரண மனிதனால் பதவி நீக்கிவிடக் கூடிய சாதாரண மனிதர்தான் காலித் என்பதை பொதுமக்களுக்கு உடனடியாக உணர்த்தாவிடடால் நிலைமை மிஞ்சி விடுமென அஞ்சினேன். ஆகவே விளக்கினேன். இதன் முலம் பொதுமக்களையும்உங்களையும்என்னையும் கூடத்தான் புகழ் என்ற போதையிலிருந்து காப்பாற்றிவிட்டதாக நம்புகிறேன்.

நீங்களும் நானும் இறந்துவிடக் கூடிய சாதாரண மனிதர்கள்இஸ்லாத்தின் பெருமையோ என்றும் நிலைத்து நிற்க வேண்டியது என்பது நமது இலட்சியம்அந்தப் பெருமை காலித் இல்லாவிட்டாலும்உமர் இல்லாவிட்டாலும் நின்று நிலைக்கும் என்பதை நாம் நிருப்பித்தாக வேண்டும்.

 

உங்களிடம் நாம் மன்றாடிக் கேட்பதெல்லாம் வீணான காரியங்களான கத்தம் ஃபாத்திஹா, தர்காஹ் இணைவைப்பு வழிபாடு, காதிரி ஹல்கா முரீது தரீக்கா! தட்டு, தகடு, தாயத்து, கொடிமரம், சந்தனகூடு, சுப்ஹான மவ்லூது, மீலாது கந்தூரி விழாக்கள் மற்றும் இன்ன பிற நபிகள் நாயகம் (ஸல்) காட்டித்தராத மார்க்கம் அனுமதிக்காத எந்த கலீபாவும் செய்யாத இந்த ஈனச் செயல்களான புதுமை பித்அத்களை ஒழித்துக்கட்ட நல்லுணர்வு பெற முயற்சிப்பீராக உங்கள் இறைவனிடம் பாவ மன்னிப்பு தேடுவீராக என்பதே!

எவரெல்லாம் சினிமா கூத்தாடிகளை தங்கள் அழகிய முன்மாதிரியாக(ரோல் மாடலாக) ஏற்ற நிலையிலேயே மரணிக்கிறார்களோ அவர்களெல்லாம் வெட்கப்பட்டு கூனி குருகி மறுமையில் கைசேதப்பட்டு நரகத்தின் தனலை எதிர்நோக்கி நிற்பார்கள் எவரெல்லாம் சத்திய சஹாபாக்களை தங்கள் அழகிய முன்மாதிரியாக (ரோல் மாடலாக) ஏற்று சத்திய மார்க்கமான இஸ்லாத்தையும் ஏகத்துவத்தையும் ஏற்று மரணிக்கிறார்களோ அவர்கள் அல்லாஹ்வின் நிழலில் இழைப்பாருவார்கள்! நீங்கள் எதை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்களோ அது கண்ணியமானதாக இருக்க வேண்டும் நாம் ஆசைப்படுவதெல்லாம் சத்திய சஹாபாக்களை நம் ரோல் மாடலாக இருக்கவேண்டும் என்பதே! அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழிகாட்டுவானாக!

 

அர்ரஹ்மானுடைய அடியார்கள் (யாரென்றால்) அவர்கள்தாம் பூமியில் பணிவுடன் நடப்பவர்கள்; (அல் குர்’ஆன் 25:63)

 

மேலும், அல்லாஹ்வையே வழிபடுங்கள்; அவனுடன் எதனையும் இணை வைக்காதீர்கள். மேலும், தாய் தந்தையர்க்கும், நெருங்கிய உறவினர்களுக்கும். அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும், அருகிலுள்ள அண்டை வீட்டாருக்கும், (பிரயாணம், தொழில் போன்றவற்றில்) கூட்டாளிகளாக இருப்போருக்கும், வழிப்போக்கர்களுக்கும், உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் அன்புடன் உபகாரம் செய்யுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையோராக, வீண் பெருமை உடையோராக இருப்பவர்களை நேசிப்பதில்லை.(அல்குர்ஆன் 4:36)

 

நன்றி – ஜஜாகல்லாஹ் கைரன்

மேற்கண்ட கட்டுரையில் என்னில் தவறு இருப்பின் சுட்டிக்காட்டவும் இன்ஷா அல்லாஹ் திருத்த முற்படுவோம்! உண்மை கூற நாம் என்றும் வெட்கப்படமாட்டோம் இது எமது ஒருவரின் ஆக்கம் மட்டுமல்ல மேற்கண்ட கட்டுரை வரைய கீழ்கண்ட தளங்களிலிருந்து கல்வி ஞானத்தை பெற்றுக் கொண்டோம் இவர்களுக்கும் இறைவனின் அருள் கிடைக்க பிரார்த்திக்கிறோம்!

https://ta.wikipedia.org/s/85t

http://nallurhameed.blogspot.in/2015/06/blog-post_74.html

https://azeezahmed.wordpress.com

http://islamicuprising.blogspot.in/2015/09/blog-post.html

http://islamiyapuram.blogspot.in/2014/12/blog-post_70.html

 

தாவா பணிக்காக உமர் பின் கத்தாப் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் கட்டுரை வரைய விரும்பிக் கேட்டுக்கொண்ட கண்ணியமிக்க சகோதரியின் மீதும் ரஹ்மத்துல் ஆலமீன் தன் கண்ணியம் என்னும் போர்வையை போர்த்துவானாக! அவரின் உள்ளத்தின் வேதனையை இலேசாக்குவானாக இழந்த விலைமதிப்பற்றபொக்கிஷங்களை மீட்டுத் தருவானாக! இம்மையிலும் மறுமையிலும் நல்லோர்களுடன் வாழச் செய்வானாக என்று பிரார்த்திக்கிறோம்!

அல்லாஹ்வின் ஒளியைத் தமது வாய்களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர். (தன்னை) மறுப்போர் வெறுத்தாலும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப்படுத்துபவன். (அல்குர்ஆன் 61:8)









என் அருமை கலீபா என் அருமை கலீபா Reviewed by Kings of Islamic e-Dawah on January 09, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.